உக்ரைனில் சனத்தொகை அடர்த்தியான பகுதிகளை குறிவைத்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டிஷ் இராணுவ உளவுத்துறை இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
அத்துடன், உக்ரேனிய படைகளின் கடும் எதிர்ப்புக்களால் ரஷ்யாவின் முன்னேற்றம் மிக மெதுவாகவே உள்ளதாகவும் புலனாய்வுத்துறை குறிப்பிட்டுள்ளது.
உக்ரேனிய படைகளின் கடும் எதிர்ப்பும் வலிமையும் தொடர்ந்து ரஷ்யாவை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாக பிரிட்டிஷ் இராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் மேரியோபோல் உட்பட பல இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
இதற்கு முன்பு 1999 இல் செச்சினியாவிலும், 2016 இல் சிரியாவிலும் இதேபோன்ற தந்திரோபாயங்களை ரஷ்யா பயன்படுத்தியது. மக்களை இலக்கு வைத்து வான் மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தியது என பிரிட்டிஷ் இராணுவ உளவுத்துறை தெரிவித்துள்ளது.
எனினும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து